செவ்வாய், 3 டிசம்பர், 2019

"ஆசை முகம்”

.ஈற்றெதுகை இணைபோல்
இன்சுவை ஈரிதழ்கள்
போற்றுகின்ற மடிப்பும்
புதுக்கவிதை போலிங்கு
ஏற்றமுடன் இருக்கும்
இடுப்பழகில் காணும்நான்
தோற்றுவிட்டேன் காதலியே
தொடவுமில்லை ஆசைமுகம்!

நேர்நேர் நிரைநிரை அசையாக
நேர்காண் பார்வையில் அசையாது
நேர்கொண்டு ஈர்க்கும் ஆசைமுகம்
நேர்கொண்டு முடிய நேர்கொண்ட
சீர்காணும் வெண்டளை விரவினால்
பேர்கொண்டு சொல்வர் வெண்பாவாய்
நேர்வகிடு எடுத்தப் பின்னலினால்தான்
சீர்கொண்டு அழைப்பர்ப் பெண்பாலாய்!
..
அசைசீர் யாப்புக்கு அழகாம் தொடை
அசையும் இடுப்புக்கு அழகாம் நடை

கண்ணதாசனின் கவிதைபோல் செப்பலோசை
உன்னழகுப் பாதங்களின் “சப்பல்” ஓசை

வைரமுத்துவின் வைரவரிகளைப் போலவே
வைரம் முத்துக்களாய் வசீகரிக்கும் கால்கள்

கைப்பேசியைக்  காதினுள் வைத்து
கைக்குள் அடக்கமாகப் பேசிடும் நளினம்
ஹைக்கூ கவிதையும் மிஞ்சிடும் மெல்லினம்...

வள்ளுவன் வடித்த மூன்றம்பாலாய்
அள்ளித் தெளித்திட்ட  இளைமையிலே
முனிவரும் மயங்குவர் இளமயிலே.....!!!
இனியான் எங்குக் காண்பேன் உன் ஆசைமுகம்!
இல்பொருள் உவமை அணியாய்:
"ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையே..!!!"
இரவின் நிலாவான என் ஆசை முகமே
பிரிவின் துயரைப் புரியாதோ உன்னகமே?

காசு நாள்  மலர் பிறப்பு என்று ஈற்றில்
முடிந்தால் வெண்பாவாம்
 சிறுமி கன்னி தாய்மை முதுமை என்று
முடிவதும் பெண்பாலே

"உடலினை மட்டும் பாடினீர்
உள்ளத்தினை ஏன் பாடவில்லை?" என்று
மடலினை யாரும் போட வேண்டா.

மறுமொழி இதோ படியுங்கள்:

உடலினைக் காட்டி எந்தன்
உறக்கத்தைக் கெடுத்த இப்பெண் தான்
உள்ளத்தினைப் பூட்டி வைத்து விட்டால்
உள்ளத்தினுள் உள்ளதை நான் எப்படி
உள்ளேசென்று பார்பேன்; படிப்பேன்?

ஈறு கெட்ட எதிர்மறையாய் அங்கே
இருந்து விட்டால்................!!

தமிழைப் பெண்ணாய்க் கண்டேன்;
பெண்ணைத் தமிழாய்க் கண்டேன்;
கவிதையைப் பெண்ணாய்க் கண்டேன்;
பெண்ணைக் கவிதையாய்க் கண்டேன்;
இரண்டிலும் இன்பம் உண்டென்று கண்டேன்;
இரண்டினையும் இணைத்தால் இன்னும்
இரண்டு மடங்காகும் இன்பம் என்றே கண்டேன்...

இல்லறப் புத்தகத்தில் இன்பத்துப்பால் ஒரு பகுதி;
கவிதைப் புத்தகத்திலும் இன்பத்துப்பா இருக்கட்டுமே.

--


”கவியன்பன்” கலாம்

0 கருத்துகள் :

கருத்துரையிடுக