திங்கள், 9 டிசம்பர், 2019


கனாவின் பலனறியா மனமாய்;
       கருவின் உருவறியாத் தாயாய்;
வினாவின் விடையறியா மாணவனாய்;
       விடியலின் வரவறியா இரவாய்;

பணத்தின் மதிப்பறியாக் குழந்தையாய்;
      படிப்பின் மதிப்பறியாப்பாமரனாய்;
உணவின் சுவையறியா உப்பில்லா
     உணவாய் அறியாமை இருளாமே


கனாவும் பலித்ததும் புரிதலாய்;
       கருவும் பெற்றபின் தெரிதலாய்;
வினாவின் விடையும் படிப்பிலாய்;
      விடிவெள்ளி கூறும் விடியலாய்;

பணத்தின் மதிப்பறியும் பருவமாய்;
     படித்தபின் பாமரனும் மேதையாய்;
உணவில் உப்பிட்டபின் சுவையாய்;
     உணரப்படும் அறிவும் ஒளியாமே


இறையை அறியா உள்ளமாய்;
         இல்லாளை அறியாக் கணவனாய்;
நிறையருள் அறியாச் சிந்தையாய்;
        நிம்மதி அறியா எண்ணமாய்;

இறப்பினை அறியா ஆன்மாவாய்;
       இம்மை அறியா வேடிக்கையாய்;
பிறப்பினை அறியாப் பிழைகளாய்;
      பிணைந்துள்ள அறியாமை இருளாமே

மறையைக் கொண்டு இறையும்;
         மகிழ்ச்சி கொண்டு மனைவியையும்;
நிறைந்துள்ளப் பேற்றினால் அருட்கொடையும்;
         நித்தமும் தியானத்தால் நிம்மதியும்;

திறந்திடும் அகக்கண்ணால் இறப்பினையும்;
       தீமைகளின் ஏமாற்றத்தால் இம்மையும்;
சிறந்த பிறப்பான உம்மையும்
      சிந்திக்கும் அறிவும் ஒளியாமே




0 கருத்துகள் :

கருத்துரையிடுக