ஞாயிறு, 8 டிசம்பர், 2019







புதுமைப் பெண்களின்
......புகழினைப் பாடும்
புதுமை காண்பவர்
......புரிவதுப் பெண்மை


பெண்மை வரமுடை
......பெருமை போனது
கண்மை வரவினால்

......கருத்த மைவிழி
மைவிழி யாலுனை
......மெய்தீண் டும்காண்
மைவிழி யாளவள்
......மெய்தான் ; பொய்மை


பொய்மைப் பேச்சு;
......போலிப் புகழ்ச்சி;
வாய்மை போனால்
......வாழ்வே மடமை

 மடமை விரும்பும்
......மனிதன் இருந்தால்
கடமை மறந்து
......கழியும் உடைமை

உடைமை இழக்க
......உரிமை பறிக்க
கொடுமை புரியும்
....கொடியோன் கொடுமை


கொடுமையிலும் கொடுமை
......கொலைசெயும் வன்மை
கடுமையாய்த் தடுத்தால்
......களையுமித் தீமை


தீமைதான் முயலாமை
......தொடரும் கல்லாமை
ஆமைபோல் இயலாமை
.....அறிவும் இல்லாமை


இல்லாமை, வறுமை
.......இளமையில் விதவை
பொல்லாத தனிமை
.....பொசுக்கிடும் இனிமை


இனிமை தருவதில்
....இனியவள் முதன்மை
மனிதன் அடைவதில்
.....மகிழ்ச்சியில் முழுமை

முழுமை இன்பம்
.....மறுமை மட்டும்
செழுமை காணச்
.....செயலே இம்மை

இம்மை வாழ்வில்
......இயம்பிடு வாய்மை
செம்மை காட்டும்
.....செயலினில் தூய்மை

தூய்மை உடையோரைத்
......தூயவன் விருப்பம்
தாய்மை அடைவோரைத்
......தாய்க்குலப் பெருமை

பெருமை என்பது
......படைத்தவன் மேலாண்மை
அருமை நண்பனின்
......உதவிடும் பேனாமை

பேனாமை கடனாய்ப்
......பகிர்ந்தவரைப்  பாராட்டிப்
பேணாமை; நலமாய்ப்
....பழகுதலைக் காணாமை

 காணாமைப் பிழையென்று
.....கடவுளைப் புரியாமை
வீணாக இறைமீது
....விமர்சனம்; அறியாமை

அறியாமை  மிகுந்து
......அகவையின் முதுமை(க்கு)
மரியாதை மறுத்தல்
.....மடமையர்ப் புதுமை!


"கவியன்பன்” கலாம்,

0 கருத்துகள் :

கருத்துரையிடுக