புதன், 4 டிசம்பர், 2019


திருமறை கூறும்
....திடமான கட்டளை
.திருநபி கூறும்
...””தொலைவான ஒட்டகம்””

அகிலத்தின் காட்சிகளை
.....அறிவிக்கும் முன்னோடி
அகிலத்தைக் காண்பதற்கு
...அணிகின்ற கண்ணாடி


சிந்தைப் பூட்டைச்
..சிறப்பாய்த் திறந்திட
விந்தை மிக்க
..விரைவுத் திறவுகோல்

சுரந்து வழியும்
...சுனைவழியின் தொடராம்
பரந்து விரியும்
....பகுத்தறிவின் சுடராம்

மிதக்கும் ஒளியாம்
..மின்னல் கீற்றாம்
செதுக்கும் உளியாம்
..சொர்க்கக் காற்றாம்


மூளையின் உணவாகும்
...முழுமையான கல்வி
மூளையே உணவாகும்
....முழுமையான கல்விக்கு!

உள்ளக் கிணற்றின்
...ஊற்றுக் குழியாம்
அள்ளக் குறையா
...ஆற்றுச் சுழியாம்

உலகம் சுற்றுவதும்
...உலகத்தைச் சுற்றி
பலனைக் கற்றுதரும்
...  பலமான கல்வி

மண்ணில் கைவைத்து
....மனிதன் கற்றது
விண்ணில் கால்வைத்து
..வியப்பைப்  பெற்றது


எல்லையும் வயதும்
...இதற்கு மட்டும்
இல்லையே மனிதா
...இறப்பில் முற்றும்


மரணம் முடிக்கும்;
....மடைமை ஒழிக்கும்;
இரந்தும் படித்தால்
...இயலாமை அழிக்கும்

செல்வமும் வீரமும்
....செழித்து வளர
கல்வியின் வீரியம்
....கடவுள் வரமாம்


சென்ற இடமெலாம்
.....செழித்திடும் வெற்றியாம்
வென்று பெறுபவர்
......வியத்தகுக் கல்வியால்



”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்



0 கருத்துகள் :

கருத்துரையிடுக