செவ்வாய், 3 டிசம்பர், 2019




உழைப்பென்னும்  நான்கெழுத்துத்  தாயின்  சேயே!
        ****உலகமெலா மொருகுடையில் ஆளும் நீயே
மழைத்துளிபோல் உயிர்நாடி யாகிப் போனாய்
       ***மழலைகளாய்ச் சில்லறைக ளீன்று போட்டாய்
தழைத்தோங்கும் செல்வத்தின் ஆணி வேராய்த்
      ****தான்மட்டும் அடையாளச் சின்ன மானாய்
பிழைப்போரும் உன்பின்னா லோட  நாட்டம்
    ****பிச்சையெடுப் போருமுன்றன்  மீதே  நோட்டம்



பொருளாதா ரப்போட்டி  நீண்ட நாளாய்ப்
     ****போர்களையும் தூண்டிவிடும் தூண்டு கோலாய்
இருளான நிலைமைக்கு மாக்கி விட்டாய்
     ****இறைபக்தி எண்ணங்கள் போக்கி விட்டாய்
வருமானம் ஈட்டுதலை வெறியா யாக்கி
     ****வறியோரைக் கொல்லுதலே குறியா  யாக்கி
ஒருமான  மில்லாத கூட்டம் சேர்த்தாய்
    ****ஒழுக்கத்தைப் புதைத்திடவே செய்தாய்  நீயே



விரும்பிப்போ னாலும்நீ எம்மை விட்டு
    ****விலகித்தான் போகின்றாய்விலகிப் போனால்
விரும்பித்தான் வருகின்றாய் உன்றன் மாய
    ****வித்தைகளை எங்கிருந்து கற்றாய் நீயும்?
நிரம்பத்தான் ஆசையுடை உடுத்திக் கொண்டாய்
    ****நிம்மதியை உளம்விட்டே எடுத்து விட்டாய்
வரம்பில்லாத் தேவைகளைக் காட்டு கின்றாய்
   ***வங்கியின்பால் எங்களையும் ஓட்டு கின்றாய்


"கவியன்பன்" கலாம்
Show quoted text

0 கருத்துகள் :

கருத்துரையிடுக