திங்கள், 2 டிசம்பர், 2019

பாலையின் மண்ணில் உதித்த அணையாப் பெருவிளக்கு
ஓலையின் பாயில் உறங்கிய "தீனின்" ஒளிவிளக்கு
சோலையாய்ச் செழிக்க மலர்ந்தச் சுவனமலர்
மாலையும் காலையும் மாசில் மனவான் முழுமதியே!

புகழுக் குரியோன் "மலக்கு" களுடன் புகழ்ந்துரைக்க
நிகழும் "ஸலவாத்" நிதமும் நிஜமாய் நிகழ்த்துகின்ற
இகமும் பரமும் நலன்கள் இதனால் வருவதெல்லாம்
சுகமாம் எமக்குக் கொடையென வந்த முகமதாலே(ஸல்)!

அறிவூறும் பலநூல்கள் வருமுன்னே
   அழியாத "அல்குர்ஆன்" பெற்றுலகில்
நெறியூட்டும் நற்செயல்கள் செய்தெம்மை
   நேர்வழியின் ஒளிவீசும் முழுமதியே!
  

முட்டுகின்ற குலப்பகை ஒழிதலிலும்
   மூளுகின்ற நிறவெறி ஒழிதலிலும்
எட்டுகின்ற வழிகளாலே எம்வாழ்வில்
   இருள்நீக்கிய மாசிலா முழுமதியே!
  
.
கோடிச்  செல்வத்தைக் கொடுத்தாலும்
   கொள்கைதனை விட்டுவிடாத வீரத்தில்

தேடி யலைந்து பார்த்தாலும்
   திருநபி(ஸல்) மாசிலா முழுமதியே!
  

வாரி வழங்கும் வள்ளமையில்
   மனத்தை அடக்கும் தன்மையில்
பாரில் சிறந்த பண்புகளில்
   படைத்தோன் படைத்த அருட்கொடையே!
  

இறைவன் சீரை உரைத்தலிலும்
   இயம்பும் பொன்மொழி வழங்கலிலும்
மறையோன் அளித்த மொழிப்புலமை
   வற்றாத ஞானத்தின் முழுமதியே!
  

ஆளும் இறையின் "வஹி"களை
   " அல்குர்ஆன்" பேழையில் நாங்களுமே
தாளும் மணக்க ஓதவைத்த
   தாஹா நபி(ஸல்)யெங்கள் முழுமதியே!

  

காடென்று மலையென்று குகையென்று
    கனிவுடனே சுமந்து திரிந்து
வீடெல்லாம் துறந்து "ஹிஜ்ரத்" தின்
   விளக்கொளியில் பயணித்த முழுமதியே!
  

நன்மார்க்கம் இதுவென்று நாடலிலும்
   பொன்மார்க்கம் இதுவென்று தேடலிலும்
இன்மார்க்கம் இதுவென்று சூடலிலும்
   "இஸ்லாத்தை" நிறைவுசெய்த முழுமதியே!
  

 *அதிரை கவியன்பன் கலாம்*

0 கருத்துகள் :

கருத்துரையிடுக